என் மகளுக்கு நான்கு கிரகங்கள் எட்டாம் வீட்டில் இருக்கின்றன. ராகு, கேது தோஷம் உள்ளதா? எந்தத் துறையில் படிப்பு அமையும்?
வாசகர், முகப்பேர்.
உங்கள் மகளுக்கு மீன லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 1ஆம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதி குரு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் ஆட்சி பெற்றுள்ள தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான மூலத் திரிகோணம் பெற்றுள்ள சுக்கிர பகவானையும், சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவானையும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான உச்சம் பெற்றுள்ள சனி பகவானையும், ராகு பகவானையும் பார்வை செய்கிறார்.
குரு பகவானின் ஏழாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் படிகிறது. தன, பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்றமர்ந்திருக்கிறார்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். ராகு பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் ராகு / கேது தோஷம் குறைகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நான்கு கிரகங்கள் "புதையல் ஸ்தானம்' என்றழைக்கப்படும் எட்டாம் வீட்டில் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெறுவதும்; ஆயுள்காரகர் ராசியில் உச்சம் பெற்று நவாம்சத்தில் மூலத் திரிகோணம் பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும். அவருக்கு கணினித் துறை படிப்பு ஏற்றது. வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டு.
தற்சமயம் நடக்கும் சுக்கிர மஹா தசை யோக தசையாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.