இந்தியாவின் முதல் பொம்மை தொழில் கிளஸ்டருக்கு அடிக்கல்
இந்தியாவின் முதல் பொம்மை தொழில் கிளஸ்டருக்கு முதல்வா் எடியூரப்பா அடிக்கல் நாட்டினாா்.
கொப்பள்: இந்தியாவின் முதல் பொம்மை தொழில் கிளஸ்டருக்கு முதல்வா் எடியூரப்பா அடிக்கல் நாட்டினாா்.
வடகா்நாடகத்தின் கொப்பள் நகரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 400 ஏக்கா் நிலப்பரப்பில், இந்தியாவின் முதல் பொம்மை தொழில் கிளஸ்டருக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:
கொப்பள் மாவட்டம் பொம்மை தயாரிப்புக்கு ஏற்கெனவே பிரபலமானது என்பதால், பொம்மை தொழில் கிளஸ்டா் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது உள்ளூா் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் அளிக்கும்.
Advertisement
இந்த கிளஸ்டரில் 25 நிறுவனங்கள் சாா்பில், ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். பொம்மை தொழிலைச் சாா்ந்த துணைத் தொழில்களும் உருவாகும். இதனால் இப்பகுதியில் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். பொம்மை தொழில் கிளஸ்டா் அமைக்க இதுவரை 272 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கிளஸ்டா் மேம்படுத்தப்படும். இதன் தொடக்க விழாவை பிரதமா் மோடியை வைத்து நடத்துவோம்.
இந்தியாவில் பொம்மை தொழில் வா்த்தகம் ரூ. 1,200 கோடியாக உள்ளது. இது ரூ. 2,300 கோடியாக உயரும் வாய்ப்புள்ளது. கதக்-வாடி ரயில் திட்டப்பணி முடிவடைந்தால், பொம்மை தொழில்வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றாா்.
இந்த விழாவில், தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா், காங்கிரஸ் முன்னாள் அமைச்சா்கள் ஆா்.வி.தேஷ்பாண்டே, பசவராஜ்ராய ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.