இன்ஃபோஸிஸ் தலைவராக நாராயண மூர்த்தி மீண்டும் நியமனம்
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவராக அதன் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவராக அதன் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாஃப்ட்வேர் துறையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாராயண மூர்த்தி விலகினார். அவருக்கு பதிலாக கே.வி. காமத் தலைவராக பதவி ஏற்றிருந்தார். இதற்கிடையே இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. நாராயண மூர்த்தி மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.
நாராணமூர்த்தி இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவராக 5 ஆண்டுக் காலம் பதவி வகிப்பார். அவரது மகன் ரோஹன் அவரது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் செயல் துணைத் தலைவராகவும், எஸ்.டி. ஷிபுலால் முதன்மைச் செயல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தனது நியமனம் தொடர்பாக நாராயணமூர்த்தி கூறியதாவது: நான் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டது மிகுந்த வியப்பைத் தருகிறது. தற்போது இன்ஃபோஸிஸ் நிறுவனம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. முதன்மைச் செயல் அலுவலர் ஷிபுலாலுடன் இணைந்து செயல்பட்டு நிறுவனத்தை செம்மையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Advertisement
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக நாராயணமூர்த்தி 19 ஆண்டுகள் பதவி வகித்த போது நியூயார்க்கின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக இன்ஃபோசிஸ் திகழ்ந்தது. மொத்தம் ரூ.23,400 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாகவும் விளங்கியது.