மும்பை பங்குச் சந்தையில் 182 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 182 புள்ளிகள் உயர்ந்து
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 182 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 19,577 என்ற அளவைத் தொட்டது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மும்பை பங்குச் சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. பருவ மழை சராசரி நிலைக்கும் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர்.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. வீட்டுவசதி, மின்சாரம், மூலதனப் பொருள்கள், வேகமாக விற்கும் நுகர்வோர் பொருள்கள், உலோகம் மற்றும் ஆட்டோ மொபைல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.
Advertisement
இதன் மூலம், 182 புள்ளிகள் உயர்ந்து, ஒரு மாத அளவில் அதிகபட்சத அளவான 19,577 என்ற அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடி லாபம் ஈட்டினர் என்று கூறப்படுகிறது.
இயற்கை எரிவாயு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்ததிலிருந்து எரிசக்தி துறை நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் விற்பனை ஆகின.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 1,124.31 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 56 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி குறியீட்டெண் 5,898 என்ற அளவில் நிலைத்தது.