ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அஸட் மேனேஜ்மெண்ட் (ஆர்என்ஏஎம்) கூட்டு நிறுவனத்தில் உள்ள தனது பங்குகள் முழுவதையும் வாங்கிக் கொள்ள நிப்பான் லைஃப் நிறுவனத்துக்கு அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேப்பிட்டல் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: ஆர்என்ஏஎம் நிறுவனத்தில் நிப்பான் லைஃப் ஏற்கெனவே 42.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அதேபோன்று ரிலையன்ஸ் கேப்பிட்டல் வசமும் 42.88 சதவீத பங்குகள் உள்ளது. இதனை முழுவதுமாக கையகப்படுத்திக் கொள்ளும் வகையில் கூட்டு நிறுவனத்தின் பங்குதாரராக விளங்கும் நிப்பான் லைஃப்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் சரியான தருணத்தில் வெளியிடப்படும் என்று ரிலையன்ஸ் கேப்பிட்டல் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்துக்கு உள்ள ரூ.18,000 கோடி கடனில் 40 சதவீதத்தை திருப்பிச் செலுத்த இந்த பங்கு விற்பனை உதவியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.