உள்நாட்டில் மோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தி துறை நடப்பு நிதியாண்டில் 15 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என தரக்குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் வரையில் இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் டிராக்டர்களின் விற்பனை சிறப்பான அளவில் மேம்பட்டிருந்தது. இந்த நிலையில், உள்நாட்டு மோட்டார் வாகன உதிரிபாக துறை நடப்பு நிதியாண்டில் 15 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். மோட்டார் வாகன துறையில் தேவைப்பாடு சுணக்கமான நிலையில் இருந்தபோதிலும் கூட இந்த வளர்ச்சியானது எட்டப்படும்.
2017-18-ஆம் நிதியாண்டில் மோட்டார் வாகனங்களின் விற்பனை வளர்ச்சி அளவின் அடிப்படையில் 14.8 சதவீதமாக காணப்படும் நிலையில், 2018-19-இல் இது 8-9 சதவீதமாக இருக்கும்.
வாகன உதிரிபாகங்களுக்கான தேவை நடப்பு நிதியாண்டில் 10-11 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இது 2017-18 9.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, வர்த்தக வாகனங்களின் விற்பனை அளவின் அடிப்படையில் சிறப்பான அளவில் காணப்படுவதே ஆதாரமாக இருக்கும்.
ஏற்றுமதியைப் பொருத்தவரையில், வர்த்தக பூசல்கள், அபராத கட்டணங்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வட்டி செலவினம் அதிகரித்து வருவது ஆகியவற்றால் அடுத்த 12-18 மாதங்களுக்கு அமெரிக்காவில் இலகுரக வாகன விற்பனை பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இக்ரா தெரிவித்துள்ளது.