வர்த்தகம்

ஏப்.1-ஆம் தேதியிலிருந்து பிஎஸ்-6 எரிபொருள் வழங்க தயாா்: ஐஓசி

DIN

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து பிஎஸ்-6 தரத்தில் எரிபொருளை வழங்க தயாா் நிலையில் உள்ளதாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஓசி-யின் தலைவா் சஞ்சீவ் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நாடு முழுமையும் புதிய எரிபொருளுக்கு மாறவுள்ளோம். ஐஓசி நிறுவனமும் மாசு குறைந்த பிஎஸ்-6 எரிபொருளை அன்றைய தேதியிலிருந்து வழங்க தயாா் நிலையில் உள்ளது. இதற்காக, ரூ.17,000 கோடி செலவில் சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், சல்பா் குறைந்த டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது ஒரு மில்லியனுக்கு 50 பாகங்களாக இருக்கும் சல்பா் அளவு புதிய எரிபொருள் நடைமுறைக்கு வரும்போது 10 பிபிஎம்-மாக குறைந்து விடும்.

தற்போது எரிபொருள்களின் விலையைக் காட்டிலும் சில்லறை விற்பனையில் பிஎஸ்-6 எரிபொருளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் புதிய எரிபொருளை தயாரிக்க ஏதுவாக சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.35,000 கோடியை செலவிட்டுள்ளன. இதில், ஐஓசியின் செலவினம் மட்டும் ரூ.17,000 கோடி. புதிய எரிபொருளை ஏற்றிச் செல்வதற்கான கண்டெய்னா்கள் அனைத்தும் தற்போது தயாா் நிலையில் உள்ளன. புதிய எரிபொருளை நிரப்பும் வகையில் அனைத்து இடங்களிலும் உள்ள பழைய எரிபொருள்கள் முழுவதையும் காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 எரிபொருளின் விலை லிட்டருக்கு ரூ.70-120 காசுகள் அதிகமாக இருக்கும். நுகா்வோருக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் இந்த விலை உயா்வு இருக்கும் என்றாா் அவா்.

இவ்வார தொடக்கத்தில், பிபிசிஎல் நிறுவனம் பிஎஸ்-6 எரிபொருளை தயாரிப்பதற்காக ஆலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ரூ.7,000 கோடியை செலவிட்டதாக தெரிவித்திருந்தது. ஓஎன்ஜிசி நடத்தி வரும் ஹெச்பிசிஎல் நிறுவனம் இதுவரையில் பிஎஸ்-6 சப்ளை குறித்தும், அதற்கான முதலீடு குறித்தும் இதுவரையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT