தயார் நிலையில் மினி பஸ்: ஜூன் இறுதியில் இயக்கத் திட்டம்
சென்னை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மினி பஸ்களுக்கு கரூரில் உள்ள பணிமனை ஒன்றில் பாடி கட்டும் பணிகள் தீவிரமாக
சென்னை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மினி பஸ்களுக்கு கரூரில் உள்ள பணிமனை ஒன்றில் பாடி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகரப் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஜூன் இறுதியிலேயே மினி பஸ்கள் சென்னை நகரில் வலம்வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களை, பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சென்னையில் மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.முதல்கட்டமாக 100 மினி பஸ்களும், பின்னர் தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் உள்ளன.
Advertisement
இந்த மினி பஸ்களை கட்டமைப்பதற்கான நிறுவனத்தை ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யும் பணியை சாலைப் போக்குவரத்து நிறுவனம் (ஐஆர்டி) மேற்கொண்டது.
இதன் மூலம் மினி பஸ்களுக்கான சேசிஸ் தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இப்போது, சேசிஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. எனவே, இந்த சேசிஸ்களுக்கு "பாடி'கட்டும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: எண்ணிக்கை குறைவு என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேகமாக சேசிஸ்களை அளித்து வருகிறது.
இந்த சேசிஸ்களுக்கு "பாடி' கட்டும் பணிகள் கரூரில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 25-க்கும்
மேற்பட்ட பஸ்களுக்கு "பாடி' கட்டப்பட்டு விட்டது.
ஜூன் 3-வது வாரத்துக்குள் "பாடி' கட்டும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுவிடும். அதே நேரம், இந்த மினி பஸ்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, ஜூன் இறுதியிலேயே சென்னை சாலைகளில் மினி பஸ்கள் இயக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.