ஆகாஷின் உடலை காவல்துறை அடக்கம் செய்ய எதிர்ப்பு! பெற்றோர், உறவினர்கள் கைது!
காவல்நிலைய விசாரணையில் மரணமடைந்த ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு...
மானாமதுரையில் 3 மாதங்களுக்கு முன்பு காவல்நிலைய விசாரணையின் போது மரணமடைந்த ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது நீதிபதி, "மனுதாரா் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், உயிரிழந்தவரின் உடலைப் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும்.
ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காவல் துறை சாா்பில் உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆகாஷின் உறவினா்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டும், அவரது உடலைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஆகியோா் ஆகாஷின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது என்றாா்.
ஆகாஷ் இறந்து 100 நாள்களைக் கடந்த பிறகும் அவரது உடலைப் பெற அவரது உறவினர்கள் மறுத்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
இதையடுத்து ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஆனால், ஆகாஷின் உறவினர்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்துச் செல்லக் கூடாது என தடுத்த ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆகாஷின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.