காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!
காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் இன்று காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடல் இன்று காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது.
குற்ற வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு காவல் துறை அழைத்துச் சென்ற நிலையில், மரணமடைந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக நீதிபதி, "மனுதாரா் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும் உயிரிழந்தவரின் உடலைப் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ள தவறினால் காவல் துறை சாா்பில் உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறினார்.
Advertisement
Advertisement
எனினும் ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகமே முறைப்படி உடலை அடக்கம் செய்ய நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
ஆகாஷ் இறந்து 100 நாள்களைக் கடந்த பிறகும் அவரது உடலைப் பெற அவரது உறவினர்கள் மறுத்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
இதையடுத்து ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய காவல்துறையினர் இன்று காலை ஏற்பாடு செய்தனர். ஆனால், ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்துச் செல்லக் கூடாது, தங்களது முறைப்படி உடலைத் தகனம் செய்ய வேண்டும் என ஆகாஷின் உறவினர்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆகாஷின் பெற்றோர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி இறந்து 102 நாள்களுக்குப் பிறகு ஆகாஷின் உடல் இன்று தத்தனேரி மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.