பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்: தொழில் தொடங்க கடன்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படவுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சென்னை மாவட்டத்தில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகள் துறை அமைச்சகம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி) கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படு
கிறது. தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநர் அலுவலகம் நடப்பு நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.85.8 லட்சம் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
Advertisement
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான முதலீட்டில் சேவை சார்ந்த தொழில் தொடங்கவும், ரூ. 10 லட்சம் முதலீடு வரை உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்கவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவுமில்லை.
இந்த முதலீட்டு உச்சவரம்பைத் தாண்டி தொழில் தொடங்குபவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவினருக்கு கடன் தொகையில் 25 சதவீதமும், பொதுப்பிரிவினருக்கு 15 சதவீத அரசு மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்போர், சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள், திட்ட முதலீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீத முதலீட்டுத் தொகையையும் தங்களது பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களுக்கு கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள தொழில் மற்றும் வர்த்தகத்துறை அலுவலகத்தை அணுகலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.