தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் கொலை
சென்னை அமைந்தகரையில் தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
சென்னை அமைந்தகரையில் தலையில் கல்லைப் போட்டு பெயின்டர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்தது: அமைந்தகரை முத்து இருளாண்டி காலனியைச் சேர்ந்தவர் கி. கோடீஸ்வரன் (42). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 4 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தாராம். சில சமயங்களில் விளம்பரங்களையும் வரைந்து வந்தாராம்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (21), அல்லி (50) ஆகியோருடன் கோடீஸ்வரன் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் எழுந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அருகில் போதையேறிய நிலையில் சிலம்பரசன் மற்றும் அல்லி இருந்தார்களாம்.
Advertisement
போலீஸ் விசாரணையில் சிலம்பரசன் கோடீஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் மேலும் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சிலம்பரசன் மற்றும் அல்லி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.