அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் இடையே முறைப்படி அமைதி ஒப்பந்தம் கையெழுத்து...
சுவிட்சர்லாந்து நாட்டில், அமைதி ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் நாளை (ஜூன் 19) நேரில் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரால், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் சர்வதேச அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.
பிரான்ஸ் நாட்டில், கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் கையெழுத்திட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Advertisement
Advertisement
இத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் அரசின் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை முறைப்படி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பிரதேசமான பர்கென்ஸ்டாக் நகரில் நாளை அமெரிக்க மற்றும் ஈரானிய பிரதிநிதிகள் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்துவது குறித்து அங்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இதில், இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய அரசு திறப்பதுடன், அமெரிக்க கடற்படையின் முற்றுகை உடனடியாக நீக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
U.S. and Iran will meet in person in Switzerland tomorrow (June 19) to formally sign a peace agreement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.