எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் பேசியது.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூன் 17) பேசியுள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியதாகவும், வரும் ஜூன் 19 ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, எகிப்து அரபு குடியரசின் அதிபருடன் டிரம்ப் கலந்துரையாடினார்.
Advertisement
Advertisement
இந்தக் கலந்துரையாடலில் டிரம்ப் பேசியதாவது:
இந்த ஒப்பந்தம் இறுதி முடிவல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்களைச் (ஈரான்) சுடுவோம். அவர்கள் தலையில் குண்டுகளை வீசுவோம். அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால், மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஏனென்றால் அவர்கள் 47 ஆண்டுகளாக தவறாக நடந்து கொண்டு வருகின்றனர்.
முன்னதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசுகையில், “நாங்கள் டிஜிட்டல் வாயிலாக, ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டோம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.