ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பற்றி...
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கின.
இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
Advertisement
Advertisement
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் ஆற்றலின் நிலைகளில், ஈரானுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்பட்டிருப்பதால் தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு, ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறப்பது, ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ஒரு முடிவுகட்டுவது போன்றவை அடங்கும்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையிலும், ஈரான் தனது நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், உலகின் எதிர்கால நலனுக்காகவும் தாக்குதலை நிறுத்த நான் ஒப்புக்கொண்டுள்ளேன். இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
The US President has announced that attacks on Iran are being halted.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.