எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!
காங்கோவில் எபோலா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது குறித்து...
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றின் பரவலால் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், எபோலா தொற்றின் புதிய பரவல் தொடங்கியது முதல் காங்கோ நாட்டில் மட்டும் 202 பேர் பலியானதாகவும், 875 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவின் இடூரி, வடக்கு கிவூ மற்றும் தெற்கு கிவூ ஆகிய மாகாணங்களில் எபோலா தொற்றின் பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்நாட்டில் எபோலா பரவலின் இறப்பு விகிதம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
காங்கோவின் சில பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால், காங்கோவில் எபோலா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் ஓராண்டு காலம் ஆகும் என செஞ்சிலுவை இயக்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.