"புற்றுநோயாளிகளைப் பராமரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்'
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்குச் சென்றவர்களை இலவசமாக கவனிப்பதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வே.கனகசபை சனிக்கிழமை தெரிவித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்குச் சென்றவர்களை இலவசமாக கவனிப்பதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வே.கனகசபை சனிக்கிழமை தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜூன் 2-ஆம் தேதி உலக புற்றுநோய் வென்றோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
Advertisement
இது குறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது: உலக புற்றுநோய் வென்றோர் தினத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனமான ஸ்ரீ மாதா புற்றுநோய் கவனிப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியவர்களை அந்த மையத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் உயிரிழக்கும் வரை அவர்களை கவனித்துக் கொள்வார்கள். அழைத்துச் செல்லப்படும் நோயாளியுடன் உறவினர் ஒருவரும் செல்லலாம்.
இருவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ 4 கோடியே 73 லட்சத்து 88 ஆயிரத்து 450 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் சிவசுப்ரமணியன், கல்லீரல் துறைத் தலைவர் டாக்டர் நாராயணசாமி, புற்றுநோய் துறையைச் சேர்ந்த டாக்டர்கள் சண்முகம், கலைச்செல்வி, சந்திரபோஸ், ஸ்ரீ மாதா புற்றுநோய் கவனிப்பு மையத்தின் நிறுவனர் டி.விஜயஸ்ரீ, மேலாண்மை நிறுவனர் வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.