வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி இளைஞர் சாவு
பண்ருட்டி அருகே பைக்கில் வந்த தம்பதியரை, காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து தாக்கி நகைகளை கொள்ளையடித்தனர். அவர்கள் தாக்கியதில் சீனுவாசன் (30) அதே இடத்திலேயே இறந்தார்.
பண்ருட்டி அருகே பைக்கில் வந்த தம்பதியரை, காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து தாக்கி நகைகளை கொள்ளையடித்தனர். அவர்கள் தாக்கியதில் சீனுவாசன் (30) அதே இடத்திலேயே இறந்தார்.
சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்த துரையின் மகன் சீனுவாசன். இவர் அங்குள்ள மருந்துக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், பண்ருட்டி காந்தி சாலையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரியின் மகள் கல்பனாவுக்கும் (26) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. வெள்ளிக்கிழமை முதலாம் ஆண்டு திருமண விழாவை பண்ருட்டியில் கொண்டாடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் பைக்கில் கடலூர் சென்று சினிமா பார்த்துவிட்டு, பின்னர் கடற்கரைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இரவு 8 மணி அளவில் பாலூர் வழியில் பண்ருட்டிக்கு பைக்கில் வந்துள்ளனர்.
Advertisement
திருவதிகை ராசாப்பாளையம் அருகே வந்த போது வெள்ளை நிற காரில் இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் வழிமறித்து, கல்பனா அணிந்திருந்த வளையல், டாலர் செயின் உள்பட 10 சவரன் நகைகளை பறித்துள்ளனர்.
பின்னர் சீனுவாசனிடம் நகைகளைப் பறிக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் கழுத்தில் பிளேடால் கிழித்ததில் சீனுவாசன் அதே இடத்திலேயே இறந்தார். இச்சம்பவத்தில் மயக்கமடைந்த கல்பனா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.