விசாரணை என்ற பெயரில் போலீஸார் கொடுமை: எம்பீ குழுமத் தலைவர் வழக்கு
விசாரணை என்ற பெயரில் தனது உறவினர்கள் மற்றும் தனது குழும ஊழியர்களை போலீஸார் கொடுமைப்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி எம்பீ குழுமத் தலைவர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் தனது உறவினர்கள் மற்றும் தனது குழும ஊழியர்களை போலீஸார் கொடுமைப்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி எம்பீ குழுமத் தலைவர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாக ஓட்டப்பட்ட ஒரு கார் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது மோதியது. அச்சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் எம்பீ குழுமத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்பீ குழுமத் தலைவர் புருஷோத்தமனின் மகனான தொழிலதிபர் ஷாஜி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் குமார், அனில் ராவ், சயீது அன்வர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஷாஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் எம்பீ குழுமத் தலைவர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். ஷாஜியை தேடுவதாகக் கூறி போலீஸார் தினமும் எங்கள் குழும நிறுவனங்களுக்கு வருகின்றனர். ஊழியர்கள் பலரை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். அதேபோல் உறவினர்கள் பலரையும், வீட்டுப் பணியாளர்களையும் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
விசாரணை என்ற பெயரில் எங்கள் குழும ஊழியர்களையும், உறவினர்களையும், வீட்டுப் பணியாளர்களையும் சட்ட விரோதமான முறையில் போலீஸார் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துகின்றனர். போலீஸாரின் இத்தகைய செயல்களால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போலீஸார் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் புருஷோத்தமன் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (ஜூன் 12) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.