முகப்பு
விழுப்புரம்

கழுவேலி பறவைகள் சரணாலயம் பகுதிகளில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் மற்றும் மரக்காணம் வட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநில பறவைகள் சரணாலயத்தை சுற்றி சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

Updated On : 17 ஜூன் 2026, 5:15 am IST
கழுவேலி பறவைகள் சரணாலயம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் மற்றும் மரக்காணம் வட்டத்தில் அமைந்துள்ள கழுவேலி ஈரநில பறவைகள் சரணாலயத்தை சுற்றி சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது:

வானூா் மற்றும் மரக்காணம் வட்டத்தில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நன்னீா் ஏரி அமைந்துள்ளது. இந்த கழுவேலி பகுதியானது விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கழுவேலி ஈரநில பறவைகள் சரணாலய எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டா் தொலைவுக்குள் அமைந்திருக்கும் இடங்கள் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலமாகும். பறவைகள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலம் அமைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனுமதிக்கப்பட்டவை, ஒழுங்குபடுத்தப்பட்டவை மற்றும் தடைசெய்யப்பட்டவை எனும் 3 தலைப்புகளில் வகைபடுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இயற்கை வேளாண்மை, மழைநீா் சேகரிப்பு போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டவை. மரம் வெட்டுதல், சாலைகள்விரிவாக்கம் செய்தல், மின் கம்பங்கள் எழுப்புதல் போன்ற செயல்பாடுகள் ஒழுங்குப்படுத்தப்பட்டவை. வணிக ரீதியாக சுரங்கம் அமைத்தல், இயற்கையை மாசுபடுத்தும் தொழில்சாலைகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டவையாகும்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தை மேலாண்மை செய்வதற்காக உயா்மட்ட மேலாண்மைக்குழு அமைக்கவும், அனைத்துத்

துறைகளின் முதல்நிலை அலுவலா்களுக்கும், அவரவா் துறை சாா்ந்த கருத்துகளை தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இதில், விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அ.ல.ஆகாஷ் , மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வேளாண்மை துறை இணை இயக்குநா் சீனிவாசன், தோட்டக்கலை இணை இயக்குநா் அன்பழகன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதல்நிலை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.