மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கச் சென்ற மாணவன் சாவு
ரயில்வே மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கச் சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
ரயில்வே மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கச் சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மீனவர் இளங்கோ. இவரது மகனான விஸ்வநாதன் (11) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். விஸ்வநாதனின் பெரியம்மா வீடு தண்டையார்பேட்டை, இளங்கோ நகரில் உள்ளது.
Advertisement
பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை தனது பெரியம்மா வீட்டுக்கு விஸ்வநாதன் சென்றார். அங்கு பெரியம்மாவின் மகன் ஹரிகுமாருடன் (14) சேர்ந்து காற்றாடி பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ரயில் கம்பத்தில் காற்றாடி சிக்கிக் கொண்டது. பொதுவாக ரயில்வே மின் கம்பத்தில் இருந்து 25,000 வாட் மின்சாரம் வந்து கொண்டிருக்கும்.
அதை அறியாத விஸ்வநாதன் காற்றாடியை எடுக்க மின் கம்பத்தில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அவரைப் பின்தொடர்ந்து ஹரிகுமாரும் கம்பத்தில் ஏறினாராம். மின் கம்பியைத் தொட்டபோது உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததால், விஸ்வநாதன் தூக்கி வீசப்பட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரிகுமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் வழித்தடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, மின் கம்பங்களைத் தொடவோ, முன்னெச்சரிக்கையின்றி ரயில் பாதையைக் கடக்கவோ கூடாது என்பதைக் கற்றுத் தர வேண்டும் என்று ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.