மின்சாரம் இல்லையென்றால்... சர்ச்சையில் மாஸ்டர் மகேந்திரன்!
நடிகர் மகேந்திரன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகராகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், மகேந்திரனுக்கு சரியான வெற்றி அமையவில்லை என்பதால் அதிக வாய்ப்புகளும் செல்வதில்லை.
Advertisement
Advertisement
அண்மையில், இவர் நடிப்பில் வெளியான 29 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மகேந்திரனிடம் சென்னையில் அடிக்கடி மின்சாரத் தடையாவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மகேந்திரன், “இவ்வளவு நாள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்தவர்கள், ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா? மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்துகூட மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் சோலார் வழியாக மின்சாரத்தைப் பயன்படுத்தலாமே? அரசை ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென கேட்டுக்கொண்டே இருப்பதா? அவரைக் (முதல்வர் விஜய்) கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.” என்றார்.
மகேந்திரனின் இப்பேச்சு பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மாதம் நீங்கள் மின்சாரம் இல்லாமல் வாழ்வீர்களா? என மகேந்திரனைக் கடுமையாகத் தாக்கியும் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.