குடிநீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நகரின் பிரதான குடிநீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் இந்த ஏரிகளில் தற்போது போதிய நீர் இருப்பு இல்லை. ஆந்திரத்தில் இருந்து கிருஷ்ண நீரும் போதிய அளவு வரவில்லை.
இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை இரவு ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 590 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போல, புழல் ஏரிக்கு 284 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 698 கன அடியும் நீர்வரத்து உள்ளது. வானிலை மையத் தகவல்படி, புதன்கிழமை காலை வரை பூண்டி ஏரியில் 73.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒரே நாளில் பூண்டி ஏரியின் நீர் இருப்பில் 85 கோடி லிட்டர் அதிகரித்துள்ளது.
Advertisement
புழல் ஏரியில் 42 கோடி லிட்டரும், செம்பரம்பாக்கத்தில் 160 கோடி லிட்டர் நீர் இருப்பும் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் குடிநீர் ஆதாரங்களின் நீர் மட்டம் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.