முகப்பு
சென்னை

பறவைக் காய்ச்சல் எதிரொலி: இறைச்சிக் கடைகள் தீவிர கண்காணிப்பு

Updated On : 8 ஜனவரி 2021, 3:11 am IST
பகிர்:


சென்னை: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளை தீவிரமாக கண்காணிக்கவும், இறைச்சிக்காக விற்கப்படும் கோழி, வாத்து ஆகியவை நோய்வாய்ப்பட்டு இறந்தால் மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக பல ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் இறந்து வருகின்றன. இந்த பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குப் பரவாமல் இருக்க கேரளத்தில் இருந்து கோழிகள், வாத்துகள் கொண்டு வரவும், அங்கிருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னா்தான் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் விற்கப்படும் கோழிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால் இங்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி கால்நடைத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பறவைக் காய்ச்சல் காரணமாக மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள கோழி இறைச்சிக் கடைகள் மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை உரிமையாளா்களுக்கு நோய்வாய்ப்பட்டு கோழி அல்லது வாத்துகள் இறப்பின் அதுகுறித்து உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறான கோழி இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டு கோழிகள் இறந்தால் அவற்றை ஆய்வகத்துக்கு கொண்டு சென்று, எதனால் இறந்தது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறைச்சிக் கடைகளைக் கண்காணிக்க கால்நடைத் துறை ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.