மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் கீர்த்தனா விவகாரத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்...
அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா பேசியதாகவும் அவர் ஆய்வுசெய்தது மரபுதான் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூலை 3 ஆம் தேதி, சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில், 'ஆங்கிலத்தில் ஒரு எளிய கேள்விக்குக்கூட பதில் அளிக்கத் தெரியவில்லை' என்று கூறி ஆங்கில வகுப்பு பாடங்களை மேம்படுத்துமாறு தெரிவித்தார். 'இதுவே இப்படி என்றால் கடைசி வரிசை மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?' என்ற கோணத்திலும் பேசினார்.
Advertisement
Advertisement
இது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்டதாக எதிர்ப்புகள் வலுத்தன. எதிர்க்கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்,
"ஆய்வுப் பணிகள் செய்வது காலங்காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும் எம்எல்ஏவும் அவரவர் தொகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது ஒரு மரபுதான். எனவே அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது மரபுதான்.
அவர் எந்த காணொலியும் எடுக்கவில்லை. அமைச்சர் கீர்த்தனாவும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்தான். தமிழ்வழியில் படித்து நன்றாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு தனித்தன்மையை வளர்த்துக் கொண்ட ஓர் அரசியல் ஆளுமைதான். மற்ற ஊடகங்கள் எடுத்த காணொலிதான் சர்ச்சையாகிவிட்டது.
எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களது ஆங்கிலப் புலமையோ அல்லது அவர்களது பின்புலமோ எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் கேட்கக் கூடாது. ஆனால் இந்த நிகழ்வில், அந்த மாணவியிடம் தன்னைப் பார்த்தது போல தோன்றியதால் ஒரு அக்கா ஸ்தானத்தில்தான் பேசினார். அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று கூறினார்.
School Education Minister Rajmohan responds regarding Minister Keerthana inspection issue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.