சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ரஜினி, ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது; தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி அன்று கொண்டாடப்படும் தன்னுடைய பிறந்தநாளை, ஜெயலலிதாவின் மறைவையொட்டி இந்தவருடம் தவிர்க்கவேண்டும் என்று ரசிகர்களிடம் தகவல் கூறியுள்ளார் ரஜினி. போஸ்டர், பேனர், தோரணம் என எவ்விதத்திலும் பிறந்தநாளைக் கொண்டாடக்கூடாது, தன்னைப் பார்க்க நேரில் வரக்கூடாது என்றும் ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல சிலவாரங்களுக்கு முன்பு கமலும், உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.