மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் மாதவ் ராமதாஸன். சுரேஷ் கோபி, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில், 2011-ம் ஆண்டு, இவர் இயக்கிய முதல் படமான மேல்விலாசம் சர்வதேச பூசான் திரைப்பட விழாவில் பங்கேற்றது. விருதுகளையும் கவனத்தையும் முதல் படத்திலேயே பெற்ற இயக்குநரானார் மாதவ்.
மேல்விலாசத்தைத் தொடர்ந்து சுரேஷ் கோபி, ஜெய சூர்யா, இந்திரன்ஸ் நடிப்பில் மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி அவர் இயக்கிய 'அப்போதேகேறி' என்ற படமும் பெரும் வரவேற்பைப் பெற்று மல்லுவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் மாதவ் ராமதாஸன். இந்நிலையில் அவரது மூன்றாவது படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் அந்த சஸ்பென்ஸை உடைத்தார்.
'இளையராஜா' எனும் தலைப்பில் அவர் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியாகி மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஜெயசூர்யா, கின்னஸ் புகழ் நடிகர் பக்ரு உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. அண்மைக்காலமாக சில சர்ச்சைகளில் சிக்கிய இசைஞானி இளையராஜாவின் பெயரில் இந்தப் படம் உருவாகப் போவது அவருக்கு மகிழ்ச்சியளிக்குமா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு இது மகிழ்வளிக்கும் ஒரு செய்திதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.