இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படும் யூடியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி புகாரளித்தனர். இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளது. கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அதன் யூடியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சி அளித்த புகாரையடுத்து திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.