திரையுலகில் 10 வருடங்களை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்
நடிகர் சிவகார்த்திகேயன் திரையுலகில் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்த மெரினா வெளியாகி 10 வருடங்களாகிறது. அதாவது சிவகார்த்திகேயன் திரையுலகில் அடியெடுத்து வைத்து 10 வருடங்களை நிறைவு செய்கிறார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பின்னாளில் தனது திறமையால் பெரும்பாலான சின்னத்திரை நிகழச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மிகவும் கலகலப்பாக அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். சிவகார்த்திகேயனுக்காகவே விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் ஏராளம்.
இந்த நிலையில்தான் அவர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் மெரினா படத்தில் நடித்தார். தொடர்ந்து 3 படத்தில் தனுஷுடன் நடித்தார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றிபெற்று அவரை தமிழின் முன்னணி நடிகராக்கியது.
நடிகர் விஜய் ஒரு விழாவில் அவர் குழந்தைகளை பிடிச்சிட்டாரு என்பார். அதாவது அனைத்து தரப்பினரையும் கவரக் கூடிய, குறிப்பாக குழந்தைகளுக்கு விருப்பமான நாயகனாக அவர் மாறிவிட்டார் என்றார். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு குழந்தைகளை அதிகம் கவரும் வண்ணம் அமைந்து வருகிறது.
இதையும் படிக்க | விக்ரம் - துருவ் இணைந்து மிரட்டும் மகான் - டிரெய்லர் இதோ
வெற்றி தோல்விகளைக் கடந்து அவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடியதாக இருந்து வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
ஒரு நடிகராக அவர் தன்னை நம்பியது மட்டுமே அவரது தற்போதைய உயரத்துக்கு காரணம். நடிப்பு, நடனம் என நடிப்பின் அத்தனை பரிணாமங்களிலும் ஜொலித்தார்.
கடந்த வருடம் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது வெளியான அவரின் டாக்டர் திரைப்படம் பெரும் வெற்றிபெற்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது. திரையரங்குகளில் 50 சதவிகித இடங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட நிலையில் வெளியான இந்தப் படம் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.
தற்போது தெலுங்கிலும் கால் பதிக்கிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்பது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீராமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள்.
இதையும் படிக்க | புஷ்பா' படத்தைப் பார்த்து செம்மரம் கடத்திய நபர்: காவல்துறையினரிடம் வசமாக சிக்கியது எப்படி?
எந்தப் பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தமிழின் முன்னணி நடிகராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது வெற்றி சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நம்பிக்கை அளித்து வருகிறது.
வழக்கமாக பக்கத்து வீட்டு பையன் பாத்திரம் மட்டுமே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை போக்கி, கனா போன்ற வித்தியாசமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். ரெமோ படத்தில் பெண் வேடத்திலும் அசத்தினார். எதிர்நீச்சல் என்ற அவரது படத் தலைப்புக்கு ஏற்ப பல்வேறு சவால்களைக் கடந்து வென்றிருக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் நாளைய திரையுலக வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும்.