சூர்யா - 45: ஏ. ஆர். ரஹ்மான் விலகல்... புதிய இசையமைப்பாளர் அறிவிப்பு!
சூர்யா - 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் அறிவிப்பு..
சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்திலிருந்து ஏ. ஆர். ரஹ்மான் விலகியுள்ளார்.
சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
படத்தின் கதை ஃபேண்டசி பாணியில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் சூர்யாவும் த்ரிஷாவும் வழக்குரைஞர்களாக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் புதிய சாதனை!
ஜெய்பீம் படத்தில் வழக்குரைஞராக நடித்து இந்தியளவில் கவனம் ஈர்த்த சூர்யா, மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ. ஆர். ரஹ்மான் இருந்தார். ஆனால், தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய இசையமைப்பாளராக சாய் அப்யங்கரை அறிவித்துள்ளது.
‘கட்சி சேர’, ‘ஆச கூட’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் பென்ஸ் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
விவாகரத்து சர்ச்சையில் இருக்கும் ரஹ்மான், சில மாதங்கள் இசைப்பணியிலிருந்து ஓய்வெடுத்து குடும்பப் பிரச்னைகளைக் கவனிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இத்தகவலை ரஹ்மான் மகள் மறுத்திருந்தார்.
இதற்கிடையே, ஏ. ஆர். ரஹ்மான் படத்திலிருந்து விலகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.