156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!
நடிகர் துல்கர் சல்மான் நடித்த படத்தின் படப்பிடிப்பு, ரிலீஸ் குறித்து...
நடிகர் துல்கர் சல்மான் நடித்த ’ஐ ஏம் கேம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனைக் குறித்து நடிகர் துல்கர், “156 நாள்களின் கடின உழைப்பு முடிவடைந்தது” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஐ ஏம் கேம். சஸ்பென்ஸ் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தை துல்கரே தயாரித்து வருகிறார்.
மலையாளத்தில் ’ஆர்டிஎக்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் கவனம் பெற்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தப் படத்தில் நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
முன்னதாக, துல்கர் நடித்த காந்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து துல்கர் சல்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஐ ஏம் கேம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. 156 நாள்களின் கடின உழைப்பு, முயற்சியினால் முடிவடைந்துள்ளது. 11 மாதங்கள், 100க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் உடல் உழைப்பைக் கோரக்கூடிய அதேசமயம் மன நிறைவான அனுபவம். அருமையான படக்குழுவினர்!
ஒவ்வொரு துறையினரும் தங்களது சிறப்பான உழைக் கொடுத்துள்ளார்கள். கடந்த 11 மாதங்களாக அனைவரும் ஒன்றிணைந்து பெரிய குடும்பமாக ஒற்றை இலக்காக நினைத்து வேலை செய்தோம்.
இதையெல்லாம் உங்களுக்குக் காட்ட நாங்கள் காத்திருக்க முடியவில்லை. ஓணம் திருநாளுக்கு உலகமெங்கும் திரைகளில் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.