வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!
நடிகர் சிபிராஜ் தவெக தலைவர் விஜய்க்கு எழுதிய கடிதம் பற்றி...
நடிகர் சிபி சத்யராஜ் தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் சத்யராஜின் மகனான இவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தியபோதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 10 ஹவர்ஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ரசிகரான சிபி சத்யராஜ் விஜய் கட்சித் தொடங்கியது முதல் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அவ்வப்போது விஜய் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் அவர் இன்று விஜய்க்கு ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்.
Advertisement
அதில், “நான் முதன்முதலில் உங்களைச் சந்தித்தபோது ஒரு அடக்கமான இளைஞனாக இருந்த நீங்கள் பிற்காலத்தில் என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான இதயங்களை வென்று ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பீர்கள் என்று முன்பு எனக்குத் தெரியாது.
நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக, நண்பனாக நீங்கள் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மதித்து, நான் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்பேன்.
இத்தனை ஆண்டுகளில் நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என் வாழ்வில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். 20-11-2000 அன்று ஆல்பர்ட் தியேட்டரில் 'பிரியமானவளே' திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் என் காதல் மனைவி ரேவதியை நான் சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், சினிமா உலகிற்குள் நுழைய நீங்கள் எனக்கு ஒரு பெரிய உத்வேகமாக இருந்தீர்கள்.
கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எங்களை மகிழ்வித்து மகிழ்ச்சியாக வைத்திருந்ததற்கு நன்றி.
நீங்கள் திரையில் எங்களுக்குக் கொடுத்த அற்புதமான தருணங்களை நாங்கள் என்றும் போற்றிப் பாதுகாப்போம். வென்று வா தலைவா. நாங்க இருக்கோம்,” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிபியின் தந்தை சத்யராஜ் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது தங்கை திவ்யா சத்யராஜ் திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.