திட்டமிட்டு தாக்குகிறார்கள்: பிரியங்கா மோகன் வேதனை
தனக்கு எதிரான தாக்குதல் குறித்து பிரியங்கா மோகன்....
நடிகை பிரியங்கா மோகன் தனக்கு எதிரான எதிர்மறை தாக்குதல்கள் குறித்து பேசியுள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார்.
அழகான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் பான் இந்தியளவில் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் பிரியங்காவால் வளர முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக, பிரபல நடிகர் ஒருவரின் நிறுவனம் தொடர்ச்சியாக பிரியங்கா மோகனை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருவதாகக் கூறப்பட்டது.
ஆனால், இதுகுறித்து பிரியங்கா பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற பிரியங்கா மோகனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரியங்கா, “ஆம். நான் தாக்கப்படுகிறேன். ஆனால், என்னை மட்டுமல்லாமல் திரைத்துறையிலிருக்கும் பலரையும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் என்னைத் தொடர்ந்து தாக்குகிறார்கள். கடந்தகாலம் குறித்து நான் பேச விரும்பவில்லை. சினிமா நிலையில்லாத ஒன்று. எது, எப்போது நடக்கும் எனத் தெரியாது. அதனால், சில நேரங்களில் அது நம்மை பாதிக்கலாம். இந்த எதிர்மறையான விஷயங்களிலிருந்தும் என்னை வளர்த்துக்கொள்ளும் வழிகளையே தேடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா நடித்த மேட் இன் கொரியா நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ளது.