தயவுசெய்து படத்தில் வைக்காதீர்கள்... கருப்பு பாடலால் புலம்பும் ரசிகர்கள்!
கருப்பு திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது...
கருப்பு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய திரைப்படம் ஓடிடி விற்பனை தேக்கத்தால் முறையான வெளியீட்டுத் தேதியைச் சந்திக்காமல் தள்ளிச்சென்றபடியே இருந்தது.
இதனால், சூர்யா ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன் விரைவில் வெளியிடக்கோரி பேசி வந்தனர்.
பல காத்திருப்புக்குப் பின் அண்மையில், இப்படம் வருகிற மே 15 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்த நிலையில், சாய் அபயங்கர் இசையில் நடிகர் சிலம்பரசன் பாடிய கருப்பு திரைப்படத்தின், ‘நாங்க நாலு பேரு’ இரண்டாவது பாடல் நேற்று (மார்ச் 23) வெளியானது.
அசல் கோலார் மற்றும் அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இப்பாடலின் வரிகளும் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் மோசமாக இருப்பதாக இப்பாடலைச் சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, தயவுசெய்து படத்தில் இதை வைக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.