யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை: வைரலாகும் ரஜினி பேச்சு!
ரஜினியின் ஆன்மீக பேச்சு குறித்து...
நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே, சில நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
அப்படி, ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
Advertisement
நிகழ்வில் பேசிய ரஜினி, “இந்த ஆசிரிமத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு இருக்கும் மக்கள், நூற்றுக்கணக்கான பசுக்கள், யானை என அனைவரும் சிரித்த முகமாக இருக்கின்றனர். 2 நாள் தங்கலாம் என வந்து, 15 நாள்கள் வரை தங்கியிருக்கிறேன். ஒருமுறை மாலை நேரத்தில் குருஜி (ரவிசங்கர்) என்னை அழைத்து தரிசனத்திற்குச் செல்கிறேன் வருகிறீர்களா? எனக் கேட்டார். நான் அவரிடம், ‘இல்லை குருஜி. ரஜினி வந்துவிட்டார் என என்னைச் சூழ்ந்துவிடுவார்கள். நான் வந்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும்.’ என்றேன். ’பரவாயில்லை வாங்க’ என அழைத்துச் சென்றார்.
எப்படியும் என்னை நெருங்கி கையொப்பம் மற்றும் புகைப்படம் எடுக்க முயல்வார்கள் என நினைத்து அவருக்கு அருகே அமர்ந்திருந்தேன். அங்கிருந்த ஒருவர் கூட என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அனைவரின் கண்களும் குருஜியை நோக்கித்தான் இருந்தன. நானாக கை காட்டிலும் யாரும் என்னைப் பார்க்கவில்லை. என் ஆணவம் சீண்டப்பட்டது. திரும்பிச் செல்லும்போது, குருஜி என்னிடம், ‘தொந்தரவு ஏதும் இல்லையே?’ என்றார். புகழ் வரும் போகும். ஆனால், அவரிடம் இருப்பது என்றும் மறையாத, வளரும் புகழ். அதுதான் ஆன்மீகத்தின் சக்தி.” என நகைச்சுவையுடன் கூறினார்.
ரஜினியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் இதனைப் பகிர்ந்து, ‘மேடைப்பேச்சு என்றால் ரஜினி எப்படியும் நம்மைக் கவர்ந்துவிடுகிறார்’ எனப் பாராட்டி வருகின்றனர்.