ராக தேவன் இளையராஜா..! பின்னணி இசை பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகுமென அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த புதிய அப்டேட் குறித்து...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய படத்தின் பின்னணி இசை தனி ஆல்பமாக படத்துக்கு முன்பே வெளியாகுமென அறிவித்துள்ளார்.
குறும்படங்களின் மூலம் பிரபலமாகி பீட்சா, ஜிகர்தண்டா, மகான் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.
தற்போது, கார்த்திக் சுப்புராஜ் தனது 10ஆவது படத்தை இயக்கிமுடித்துள்ளார். இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ், தம்மம் ஃபிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மகான் படத்துக்குப் பிறகு நான் எடுக்க நினைத்த, எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ஒரு கதைதான் கதைசொல்லியைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இந்தக் கதை தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளது. சிறந்த மனிதர்களால் இந்தப் படம் உருவாகியுள்ளது.
நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் மகிழ்ச்சி. நான் முதல்முறை கதை சொல்லும்போதிருந்தே என்னுடைய நோக்கத்திலேயே அவர்களும் இருந்தார்கள். என்னுடைய கனவுதான் அவர்களுடையதும்.
நம்பமுடியாத ஒன்று என்னவெனில் மேஸ்ட்ரோ இசையமைப்பதுதான். இது அவரது 1540ஆவது படம். அவரது இசையைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவரது பின்னணி இசையோ பாடலோ பொருந்திப்போகும். மகிழ்சி, சோகம், காதல், கோபம், உத்வேகம் என எல்லாமே அவரது இசையில் ஒன்றிணைந்திருக்கும். எனக்கு அவர் வாழ்க்கை முறை. பலருக்கும் அப்படித்தான்.
அவருடன் வேலைப் பார்ப்பது வாழ்நாள் கனவு. முந்தைய படங்களுக்கு அவரிடம் செல்லும் தைரியம் எனக்கு இல்லை. இந்தப் படத்தின் முதல் கட் முடித்த பிறகு அவரிடம் காட்ட வேண்டுமென நினைத்தேன். அவர் சம்மதம் தெரிவிப்பார் என வலுவாக நினைத்தேன். அதேமாதிரி அவரும் கூறினார்.
சனிக்கிழமை இரவு அவர் படம் பார்த்தார். படம் பிடித்ததால் அடுத்த நாள் காலை முதலே இசையமைக்கலாம் என்றார். அதுமுதல் அடுத்த 25 நாள்கள் ராக தேவனுடன் ஆன்மிக பயணம் சிறப்பாக அமைந்தது.
இசையை உருவாக்குவதை நேரடியாகப் பார்ப்பது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
பாடல்களைத் தாண்டி பின்னணி இசையை தனி ஆல்பமாக படத்தின் ரிலீஸுக்கு முன்பாக வெளியிடலாம் என இளையராஜா சாருமே கூறியுள்ளார்கள். அதனால், விரைவில் வெளியிடவிருக்கிறோம். நீங்கள் அதைக் கேட்டு, உணர்ந்து, உருக நான் காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.