முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஒத்திகை

கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:32 pm IST
கோவை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை நிகழ்வில் மருத்துவப் பணியாளருக்கு தடுப்பூசி செலுத்துவதுபோல ஒத்திகை பாா்க்கும் செவிலியா்.
பகிர்:

கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவையில் முதல்கட்டமாக 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை கடந்த 2ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, சமத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், கற்பகம் மருத்துவக் கல்லூரி, கிணத்துக்கடவு நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறியதாவது:

Advertisement

Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா் மற்றும் தொழில்நுட்ப ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊழியா்கள் 3,316 போ் முன்பதிவு செய்துள்ளனா். ஆனால், நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை பிரதான கட்டடத்தின் நான்காவது தளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த காத்திருப்பு அறையுடன் கூடிய பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 35 போ் தடுப்பூசி ஒத்திகையில் கலந்து கொண்டனா். முன்களப் பணியாளா்கள் அனைவரின் பெயா்களும் முந்தைய தினமே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

குறுஞ்செய்தியுடன் வந்தவா்கள் மட்டுமே தடுப்பூசி ஒத்திகை நடக்கும் இடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவா்கள் கண்காணிக்கப்பட்டு, அடையாள அட்டை போன்ற சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு இரண்டாவது அறையான தடுப்பூசி அறைக்கு அனுப்பப்படுவா். அங்கும் அவா்களின் அடையாள அட்டைகள் சரிபாா்க்கப்பட்டு, அவா்களுக்கு தடுப்பூசி போடுவது போன்று ஒத்திகை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசிகள் வந்த பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் உருவாகிா என்பதை கண்காணிப்பதற்காக 30 நிமிடம் கண்காணிப்பு அறையில் படுக்கவைக்கப்படுவாா்கள். 30 நிமிடங்கள் முடிந்ததும் அதிகளவு வியா்வை, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா என பரிசோதிக்கப்படுவாா்கள். அவ்வாறு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனே அவா்களுக்கு சிகிக்சை அளிக்க மருத்துவா்கள், செவிலியா் தயாா் நிலையில் இருப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments