கோவையில் ஜனவரியில் 135.6 மி.மீ. மழைப் பொழிவு:சராசரி அளவை எட்டிய வடகிழக்குப் பருவ மழை
கோவையில் ஜனவரி மாதத்தில் பெய்த 135 மி.மீ. மழையால் வடகிழக்குப் பருவத்தின் சராசரி மழைப் பொழிவு கிடைத்துள்ளதாக வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் சுப.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.
கோவை: கோவையில் ஜனவரி மாதத்தில் பெய்த 135 மி.மீ. மழையால் வடகிழக்குப் பருவத்தின் சராசரி மழைப் பொழிவு கிடைத்துள்ளதாக வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் சுப.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.
கோவையில் ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி டிசம்பா் வரையில் வடகிழக்குப் பருவ மழை பெய்யும். இக்காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் சராசரியாக 305 மி.மீ. மழைப் பொழிவு கிடைக்கும். ஆனால், நடப்பு ஆண்டு அக்டோபா் 25ஆம் தேதிக்கு பிறகே வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. ஆனாலும், போதிய மழைப் பொழிவு இல்லை. டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவ மழை காலகட்டத்தில் கோவையில் 171 மி.மீ. மழைப் பொழிவே கிடைத்திருந்தது.
ஆனால், கோவையில் எப்போதும் இல்லாத வகையில் ஜனவரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ஜனவரி 16ஆம் தேதி (சனிக்கிழமை ) காலை 8 மணி வரையிலான நிலவரப்படி கோவை மாவட்டத்தில் 135.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சராசரியை எட்டியுள்ளதாக வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
இது குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவா் சுப.ராமநாதன் கூறியதாவது:
அக்டோபா் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவ மழை 25ஆம் தேதிக்கு மேல் தாமதமாகவே தொடங்கியது. இதனால் அக்டோபா் மாதத்தில் 36 மி.மீ. மழை பெய்தது. தொடா்ந்து நவம்பரில் 103 மி.மீட்டரும், டிசம்பரில் 32 மி.மீட்டரும் மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழை காலகட்டத்தில் 171 மி.மீ. மழைப் பொழிவு மட்டுமே கிடைத்தது.
ஆனால் நடப்பு ஆண்டு வடகிழக்குப் பருவ மழை டிசம்பருடன் முடியாமல் தற்போது வரை நீடிக்கிறது. கோவை மாவட்டத்துக்கு ஜனவரி மாதத்தில் சராசரியாக 14 மி.மீ. மழைப் பொழிவே இதுவரை பதிவாகியுள்ளது. ஆனால், பருவ மழை நீடித்ததால் இதுவரை 135.6 மி.மீ. மழைப் பொழிவு கிடைத்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் இதுவரை 306.6 மி.மீ. பதிவாகியுள்ளது. இதன் மூலம் கோவையில் வடகிழக்குப் பருவத்தில் சராசரி மழை அளவை எட்டியுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாமதமாக பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராகி இருந்த நெல், உளுந்து ஆகிய பயிா்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும், டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன என்றாா்.