சம்பளம் வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள்
சிதம்பரம் வட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதச் சம்பளம் வழங்கப்படாமல் இரு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்
சிதம்பரம் வட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதச் சம்பளம் வழங்கப்படாமல் இரு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கருவூல அதிகாரிகளால்
அலைக்கழிக்கப்பட்டு அவதியுற்றுள்ளனர்.
தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நெட்பேங்கிங் முறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும், கோர் பேங்கிங் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்குத் தொடங்கி பாஸ் புத்தகம் மற்றும் எண்ணை வட்டாட்சியரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
அதன் பேரில் அனைவரும் வட்டாட்சியரிடம் வங்கி பாஸ் புத்தகத்தை வழங்கினர். அதனடிப்படையில் சம்பளம் வழங்க எப்போதும் போல் கருவூலத்துக்கு பில் அனுப்பட்டது.
அவர்கள் அதை சி.டி. மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைத்தனர். வங்கி மூலம் அவரவர் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதிய முறை என்பதால் தாமதமாக மாதக் கடைசியில் பிப்ரவரி மாதம் சம்பளம் கிடைத்தது.
இதில் சிதம்பரம் வட்டத்தில் இரு கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மார்ச் மாத சம்பளம், கருவூலத்தில் நெட்வொர்க் கோளாறினால், அனைவரது சம்பளத்தையும் மொத்தமாக காசோலை அளித்து வங்கியிலிருந்து பணம் எடுத்து ரொக்கமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிதம்பரம் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த பலருக்கு பிப்ரவரி மாத சம்பளம், இதுநாள் வரை வழங்கப்படாமல் கருவூல அதிகாரிகளாலும், வங்கி அதிகாரிகளாலும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பளம் குறித்து கருவூல அதிகாரிகளை சந்தித்து கேட்ட போது, "வங்கியில் சென்று விசாரித்து பெற்றுக் கொள்ளுங்கள்' என கூறுகின்றனர். வங்கிக்குச் சென்றால் "கருவூல துறையில் இருந்து முழுவிவரம் பெற்று வாருங்கள். காசோலை தருகிறோம்' என அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பிறதுறைகளைச் சேர்ந்த பலரும் பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சம்பளத்தை நம்பி வாழும் அரசு ஊழியர்களுக்கு அலைக்கழிக்கப்படாமல் சம்பளம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.