யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன?
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்வானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது பற்றி...
2026-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று (ஜூன் 15) வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது, தேர்வர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கு 1,016 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24 ஆம் தேதி நடைபெற்றது. 2025-இல் அறிவிக்கப்பட்ட 1,087 காலிப் பணியிடங்களைவிட இது சற்று குறைவுதான்.
Advertisement
Advertisement
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. காலிப் பணியிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, முதன்மைத் தேர்வுக்குத் தேர்வானவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் தேர்வில் 1,016 காலிப் பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 1,087 காலிப் பணியிடங்களுக்கு 14,161 பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளைக் காட்டிலும் இந்திய வனப் பணி (IFoS) தேர்வுப் பட்டியலில் தேர்வானவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அதேபோல இந்திய வனப் பணித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
ஐஎஃப்எஸ் தேர்வில், இந்த ஆண்டு 80 காலிப் பணியிடங்களுக்கு 1,046 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 150 காலிப் பணியிடங்களுக்கு 2,116 பேர் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதுகின்றனர். அதில் மிகக் குறைவானவர்களே கட்-ஆப் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு கட் - ஆப் மேலும் உயர்த்தப்பட்டிருக்கலாம் எனவும் தேர்ச்சி விகிதத்தில் தேர்வாணையம் மேலும் சில கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம் என்றும் தேர்வர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே நடந்து முடிந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் வடிவம் மாறி வருவதாகவும் இந்தாண்டு அனைத்துப் பிரிவுகளிலும் நடப்பு நிகழ்வுகள் அதிகம் கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்துள்ளது மாணவர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
upsc.gov.in, upsconline.nic.in. ஆகிய யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளைக் காணலாம்.
முதன்மைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 13,343 தேர்வர்களும் ஜூன் 19 முதல் ஜூன் 28-க்குள் இணையவழியில் முதன்மைத் தேர்வுக்கான விரிவான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
கட்டணம் செலுத்துதல், தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பித்தல், பணிப்பிரிவு (cadre) விருப்பங்களைக் குறிப்பிடுதல் ஆகியவை இதில் அடங்கும். விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டால் முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி அட்டவணையின்படி வருகிற ஆகஸ்ட் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.
முதன்மைத் தேர்வைத் தொடர்ந்து நேர்காணலிலும் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம்பெறுவார்கள். இறுதி மதிப்பெண்கள் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளுக்குத் தேர்வாவார்கள்.
சி-சாட் தேர்வு (CSAT Exam)
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் இரண்டாம் தாளாக 'சி-சாட்' (குடிமைப் பணிகள் திறனறித் தேர்வு) 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. இந்த தாளில் தகுதி பெற்றால் மட்டுமே முதல் தாள் திருத்தப்படும். சி - சாட் தாளில் தோல்வியுற்றால் முதல்நிலைத் தேர்வில் தோல்விதான். இதற்கு ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தாளின் வினாக்கள் ஒவ்வொரு ஆண்டும் கடினமாக மாறி வருகிறது. இந்தாண்டு முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்ததற்கும் சி - சாட் தாளுக்கு எதிராகவும் சமீபத்தில் தலைநகர் தில்லியில் யுபிஎஸ்சி தேர்வர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.