பண்ருட்டியில் 2-வது நாளாக நகர பஸ் போக்குவரத்து நிறுத்தம்
பண்ருட்டி பகுதியில் மீண்டும் அரசு பஸ் மீது கல் வீச்சு சம்பவம் புதன்கிழமையும் தொடர்ந்தது. இதனால் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு,
பண்ருட்டி பகுதியில் மீண்டும் அரசு பஸ் மீது கல் வீச்சு சம்பவம் புதன்கிழமையும் தொடர்ந்தது. இதனால் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் 2-வது நாளாக சிரமம் அடைந்தனர்.
ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரசு பஸ்களைக் குறி வைத்து கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் 6-க்கும் மேற்பட்ட அரசு பஸ் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகள் தவித்தனர்.
Advertisement
இந்நிலையில் புதன்கிழமை நெய்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்குச் சென்ற அரசு பஸ் மீது பாவைகுளம் அருகே கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் அனைத்து நகர பஸ்களும் நிறுத்தப்பட்டதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர். தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர்-சித்தூர் மாநில நெடுஞ்சாலை வழியாக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முக்கிய இடத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக கிராம பகுதிகளுக்குச் செல்லும் பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.