முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!
திருச்சி கிழக்கில் விஜய் வெற்றியை செல்லாததாக அறிவிக்கக் கோரி வழக்கு...
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கில் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றியை செல்லாதது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
”திருச்சி கிழக்கில் வெற்றி பெற்ற விஜய் தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதால், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக கருதி, அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
மேலும், இந்த தேர்தல் வழக்கு முடியும் வரை அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட விஜய் 91,381 வாக்குகள் பெற்று, 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்றார்.
முன்னதாக, கோபி செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
DMK candidate Inigo Irudayaraj files case against Chief Minister Vijay's victory!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.