பாதுகாப்புப் பணியில் கூடுதலாக 2 எஸ்.பி.-க்கள், 500 போலீஸார்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கடலூர் மாவட்டத்தில்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக இரு எஸ்.பி.-க்கள் மற்றும் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்காணம் வன்முறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ராமதாஸ் மற்றும் பா.ம.க.-வினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சு மற்றும் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
Advertisement
இது தொடர்பாக மாவட்டம் முழுவதுóம 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.-வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடலூர் மாவட்ட பாதுகாப்புப் பணிக்காக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு, சென்னை பட்டாலியன் பிரிவு எஸ்.பி. காமினி ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர்.
மேலும் விருதுநகர், மதுரையில் இருந்து 300 போலீஸார், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 200 போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கடலூர் வந்து சேர்ந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த போலீஸார் புதன்கிழமை காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பண்ருட்டி, நெய்வேலி, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் எஸ்.பி. திருநாவுக்கரசு பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளின் பாதுகாப்புப் பணியில் எஸ்.பி. காமினி ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட 500 போலீஸாரும் தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு பதட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.