பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: முதல்வர் விஜய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை! கனிமொழி
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்குறித்து முதல்வர் விஜய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என கனிமொழி குற்றச்சாட்டு...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து முதல்வர் விஜய், இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
Advertisement
"தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரசாரம் செய்துதான் அவர்கள் ஆட்சிக்கே வந்தார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த அரசு கவலை கொள்வதாகத் தெரியவில்லை. எந்த அக்கறையும் இல்லை. அதைவிட மோசமாக, குற்றங்களைத் தடுப்பதை விட அவற்றை மூடி மறைப்பதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது.
ஒரு குழந்தைக்கு உடற்கூறாய்வு நடக்கும் இடத்திற்கு தவெக எம்எல்ஏ சென்று அவரது பெற்றோரிடம் பேரம் பேசுகிறார். அந்தளவுக்கு மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டை இவ்வளவு மோசமான சூழலுக்குத் தள்ளியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே இருந்ததை பெயர் மாற்றம் செய்து சிங்கப்பெண் அதிரடி படை என்று வைத்திருக்கிறார்கள். அதுகூட நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த சிறப்புப் படைக்கு என்ன அதிகாரம் உள்ளது? அந்த படைக்கு சிறப்பு தொடர்பு எண்கூட இல்லை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து முதல்வர் இதுவரை வாய் திறந்து ஒருவார்த்தைகூட பேச தயாராகவில்லை. முதல்வருக்கு பெண்கள் மீது, குழந்தைகள் மீது, மக்களின் பாதுகாப்பு மீது எந்த அக்கறையும் இல்லை. நேரடியாக அவருக்கு கீழ் இருக்கும் காவல்துறையைப் பற்றி அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய சம்பவங்களில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
தனிநபர் ஒழுக்கம், போதை என்றெல்லாம் காரணம் சொல்லி கடமையிலிருந்து தவறுகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணம் என்று திரைப்படங்களில் அவர் பேசிவிட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். ஒருவேளை பெண்கள் மீதே குற்றங்களைத் திருப்புகிறார்களா என்று தெரியவில்லை" என்று பேசினார்.