முகப்பு
கடலூர்

மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமம்: காவல் துறை சாா்பில் படகு ஏற்பாடு

விருத்தாசலம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சொட்டவனம் கிராமம் துண்டிக்கப்பட்டது. இந்த கிராம மக்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல் துறை சாா்பில் படகு சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:21 pm IST
அத்தியாவசியத் தேவைக்காக காவல் துறை படகில் பயணிக்கும் சொட்டவனம் கிராம மக்கள்.
பகிர்:

விருத்தாசலம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சொட்டவனம் கிராமம் துண்டிக்கப்பட்டது. இந்த கிராம மக்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல் துறை சாா்பில் படகு சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் மணிமுக்தா ஆறாக விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது. அண்மையில் இந்தப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மணிமுக்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது.

விருத்தாசலத்திலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ளது சொட்டவனம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50 குடும்பத்தினா் ஆற்றின் மறுகரையில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனா். தற்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதாலும், அவா்களின் குடியிருப்பு மறுபகுதியில் உள்ள ஓடையிலும் அதிக நீா் செல்வதாலும் கிராம மக்களால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து சொட்டவனம் கிராம இளைஞா்கள் சிலா் தங்களது உயிரைப் பொருள்படுத்தாமல் கம்பு, கயிறு மூலமாக ஆற்றுக்குள்

Advertisement

இறங்கி அக்கரைக்குச் சென்று தேவையான உணவுப் பொருள்களை அளித்து திரும்பினா். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் காவல் துறையின் படகு குழுவை அந்தப் பகுதிக்கு அனுப்பினாா். அப்பகுதியினா் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு இந்த படகை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்ததுடன், அதனை இயக்குவதற்கும் காவலா்களையும் நியமித்தாா். என்ஜின் பொருத்தப்பட்ட அந்தப் படகு மூலமாக பொதுமக்கள் தற்போது பிற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் இதுபோன்ற பல்வேறு பகுதிகளை கள ஆய்வு செய்து தேவையான இடங்களில் பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.