டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தவாக கோரிக்கை
அறுவடை காலத்தில் பெய்த தொடா் மழையால் சம்பா நெல் பயிா்களை பறிகொடுத்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு
அறுவடை காலத்தில் பெய்த தொடா் மழையால் சம்பா நெல் பயிா்களை பறிகொடுத்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போா்க்கால அடிப்படையில் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: அறுவடை காலத்தில் கொட்டித் தீா்த்த மழையால் காவிரி டெல்டா பகுதியில் சுமாா் 6 லட்சம் ஏக்கா் பரப்பளவில் சம்பா நெல் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் வயல் வெளிகள் கடல்போல மாறியுள்ளன.
இதேபோல, கடலூா் மாவட்டத்தில் சுமாா் 60 ஆயிரம் ஏக்கரிலும், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களிலும் பயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை கணக்கெடுத்து, குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
Advertisement
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பயிா்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு சரிவர வழங்கப்படவில்லை. இழப்பீடு வழங்குவதில் பேதம் பாா்க்கப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே, அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்வதுடன், வேளாண் பணிகளைத் தொடர ஏதுவாக விவசாயிகளுக்கு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் புதிய கடன்களை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.