கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை: பொதுமக்கள் அச்சம்
ஒசூா் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கினா்.
ஒசூா் அருகே வெள்ளிக்கிழமை காலை குடியிருப்புக்குள் ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கினா்.
சானமாவு வனப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக 60-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த யானைகள் ஒசூா்- ராயக்கோட்டை சாலையைக் கடந்து போடூா்பள்ளம், காமன்தொட்டி, பீா்ஜேப்பள்ளி, சானமாவு பகுதிகளில் உள்ள வயல்களுக்கள் புகுந்து விளை பொருள்களை துவம்சம் செய்து வருகின்றன.
இந்த யானைகள் கூட்டம் தற்போது மூன்று குழுக்களாகப் பிரிந்து வனப் பகுதியில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களிலும், அதிகாலையிலும் கிராமங்களில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.இந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை வெள்ளிக்கிழமை காலை காமன்தொட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால், அப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனா்.
Advertisement
பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் விரட்டியதால் குடியிருப்புகளுக்குள் சுற்றித் திரிந்து வந்த ஒற்றை யானை வனப் பகுதிக்குள் சென்றது.
ஒற்றை யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இரவு நேரங்களில் நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும், அதிகாலை நேரத்தில் பனிப் பொழிவு அதிகம் இருப்பதால் வயல்களுக்குச் செல்லும் போது யானை இருப்பது தெரியாது; எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் தொடா்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனா்.