8-ம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி என்ற கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக
அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி என்ற கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக மாணவர்கள் சங்கத்தினர் பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூர் மைசூர் வங்கி சதுக்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியது:
நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 8-ஆம் வகுப்பு வரை முழுத் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வித் தரம் குறைந்துள்ளது. மாணவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்கள் தேர்ச்சி அடையும் நிலை இருப்பதால், ஆசிரியர்களை மதிப்பிடவும் முடியவில்லை. இதனால், பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 46.3 சதம் பேர் 2-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியாத நிலையில் உள்ளனர். இது 2013-ஆம் ஆண்டு 58 சதமாக உயர்ந்துள்ளது.
2010-இல் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53.4 சதம் பேரால் முதல் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை.
இது 2013-ஆம் ஆண்டு 67.7 சதமாக உயர்ந்துள்ளது.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் முழுத் தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு தனது கல்விக் கொள்கையை மாற்றம் செய்து, முன்பு இருந்தது போன்றே தேர்ச்சி- தோல்வி முறையைக் கொண்டுவர வேண்டும். அப்போது தான் கல்வித் தரம் உயரும் என்றார் அவர்.
சங்கத்தின் பெங்களூர் மாவட்டச் செயலர் ரவிநந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.