மழைக்காலத்துக்கு முன்பாக சாக்கடைகளை தூர்வார வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சாக்கடைகளைத் தூர்வார வேண்டும். அப்போதுதான் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் தேங்குவதைத்
தில்லியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சாக்கடைகளைத் தூர்வார வேண்டும். அப்போதுதான் கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க முடியும் என்று தில்லி மாநகராட்சிகளுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"இந்தப் பணிகளை பொதுப் பணித் துறை, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.), தில்லி ஜல போர்டு, மூன்று மாநகராட்சிகள் ஆகியவை குறுகிய கால நடவடிக்கையாக முடிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். தூர்வாரும் பணியைச் செயல்படுத்த உரிய இயந்திரம் செயல்படுத்தப்பட வேண்டும்' என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெüல், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
கழிவுநீர்க் கால்வாய்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சிகளும், பிற அரசுத் துறை அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கக் கோரி "நியாய பூமி' என்ற தொண்டு நிறுவனம் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "சாக்கடைகளைத் தூர்வாரும் பணிகளை தில்லி அரசால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்யலாம். இந்தப் பணியில் அரசுத் துறைகளுடன் குடியிருப்போர் நலச் சங்கங்களும்கூட பங்கேற்க வேண்டும்.
அப்போதுதான் பகுதி வாரியாகக் கழிவுநீர் அமைப்பு முறையை மேம்படுத்த முடியும். சிறிய கற்களும், சகதியும் சாக்கடையில் அடைத்துக் கொள்வதால் தண்ணீர் தேங்குகிறது.
ஆகவே, அவற்றைக் கொட்டுவதற்கான இடத்தையும் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
முன்னதாக, சௌத் எக்ஸ்டென்ஷன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் பகுதியில் கழிவுநீர் சாக்கடைப் பணியை முடிக்க நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்தும், தில்லி மாநகராட்சி அதிகாரிகள் எந்தவிதப் பணியையும் மேற்கொள்ளாமல் இயந்திரத்தை அங்கிருந்து அகற்றிவிட்டனர்' என்று கூறப்பட்டிருந்தது.
"இது தொடர்பான பணிகளை முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின்படி, சம்பந்தப்பட்ட துறையினர் முடிக்க வேண்டும் அல்லது அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள நேரிடும்' என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.