முகப்பு
புதுதில்லி

மேம்படுத்தப்பட்ட கஷ்மீரி கேட் பேருந்து நிலையம் இன்று திறப்பு

மேம்படுத்தப்பட்ட மகாராணா பிரதாப் கஷ்மீர் கேட் பேருந்து  நிலையத்தை முதல்வர் ஷீலா தீட்சித் வியாழக்கிழமை காலை திறந்து வைக்கிறார்.

Updated On : 2 மே 2013, 12:04 pm IST
பகிர்:

மேம்படுத்தப்பட்ட மகாராணா பிரதாப் கஷ்மீர் கேட் பேருந்து  நிலையத்தை முதல்வர் ஷீலா தீட்சித் வியாழக்கிழமை காலை திறந்து வைக்கிறார்.

தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ரமா காந்த் கோஸ்வாமி தலைமையில் நடைபெற உள்ள விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொள்கிறார்.

மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் குறித்து "டிஐஎம்டிஎஸ்' அரசு நிறுவன உயரதிகாரி கூறியது:

Advertisement

Advertisement

இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் சுலபமாக வந்து செல்லும் வகையில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் காத்திருக்கும் இடம், டிக்கெட் பெறும் இடம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன.

மேல் தளங்களுக்குச் செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வந்து செல்லும் கால அட்டவணையைத் தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், சிசிடிவி கேமராக்கள், மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டடம் நில அதிர்வுகளை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் 2011 ஜூலையில் தொடங்கப்பட்டன. அதற்காக பேருந்து நிலையத்தில் பகுதி அளவு மூடப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஆனந்த் விஹார், சராய் காலே கான் பேருந்து  நிலையங்களுக்கு தாற்காலிகமாகத் திருப்பிவிடப்பட்டன.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினமும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருந்துகளும், 500 உள்ளூர் பேருந்துகளும் வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.